அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என தெற்கு கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த வேண்டும் என சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பியது. அதற்கு இல்லை என மனுதாரர் பதில் அளித்தார்.
பின்னர் சரியாக நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனவும் வேண்டுமென்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட்டிருந்தது.