தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்ததன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கு மீது விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், இன்றும் மறுவிசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை முன்வைத்துள்ளது. முன்னதாக பேசிய தமிழ்நாடு அரசு தங்கள் தரப்பு வாதத்தில், ”2 ஆவது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்தான் அளித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்காமல் 10 மசோதாக்களையும் ஆளுநர் கடந்த 28 தேதி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்” என்று வாதிட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வாதத்தில், “அரசியல் சாசன அடிப்படையில் மசோதாவை கிடப்பில் வைத்திருக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்” என்று விளக்கமளித்துள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இது குறித்து தெரிவிக்கையில்,
“ஆளுநர் ரவி தரப்பில் குழப்பம் உள்ளது. 10 மசோதாக்களையும் முதலில் அனுப்பியபோதே குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பியிருக்கலாமே?. ஆனால் 2 ஆவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்ப முடியும்?. கிடப்பில் வைத்த மசோதாக்களை அப்போதே சட்டமன்றத்துக்கு அனுப்பி இருக்கலாம். அப்படி அனுப்பாததற்கு காரணம் என்ன என்று கூறவேண்டும்.
எனவே ஆளுநர் - முதலமைச்சர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. பிரச்னைக்கு தீர்வுக்காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பதுதான் சரியாக இருக்கும். முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம்.. இல்லையெனில் நாங்கள் ஆளுநருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என்று உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இவ்வழக்கை டிசம்பர் 11க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.