ஜெயலலிதா பரிசுப்பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜெயலலிதா 1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளுக்கு ஏராளமான பரிசு பொருட்களும், காசோலைகளும் வந்தன. இதன் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய் ஆகும். முதல்வராக இருப்பவர் தனக்கு வரும் பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், பரிசு தொகையைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் ஜெயலலிதா டெபாசிட் செய்ததாகப் புகார் கூறப்பட்டது. இதுபற்றி ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சிபிஐ. ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு இறந்துவிட்டதால், வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். செங்கோட்டையன் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா பரிசுப்பொருள் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்தும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.