3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி திமுக முறையீடு
3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு மூவரும் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதில் 7 நாட்களுக்குள் 3 எம்.எல்.ஏக்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. பேரவை செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார். இந்நிலையில் 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.
அதில் ''சபாநாயகர் தனபால் நடுநிலையை தவறிவிட்டார். அதனால் நாங்கள் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். இந்நிலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் விவகராத்தில் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு உரிமை இல்லை. எனவே 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுகவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.