\
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - சென்னையில் முதியவர் தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - சென்னையில் முதியவர் தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - சென்னையில் முதியவர் தற்கொலை
Published on

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் - நல்லாங்குப்பத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் பெருமாள். பெயிண்டராக வேலைப்பார்த்து வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்த பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த பெருமாளின் மகன் லேகேஷ், தந்தை தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார் . உடனடியாக அவரை மீட்ட லோகேஷ், மாம்பலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற
குமரன் நகர் காவல் துறையினர், ஆய்வு நடத்தியதில் பெருமாளின் சட்டைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.அதில்  ‘‘பலபேர் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். நான் விவசாயிகளுக்காக என் உயிரை துறக்கிறேன். வேளாண் சட்டத்தை ரத்து செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்புமில்லை. கார்ப்ரேட் முதலாளிகளுக்கும் எந்த நஷ்டமும் இல்லை. அதனால் முன்பு இருந்த நடைமுறை இருப்பதில் தவறு ஏதும் இல்லையே. என் தற்கொலை விவசாயிகளின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியாகும் என நம்புகிறேன். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறள் வரிகளே இதற்குப் பொருந்தும்’’ என பெருமாள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய காவல் துறையினர், அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரை மாய்த்துக் கொண்ட பெருமாளின் குடும்பத்தினருக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com