தமிழ்நாடு
சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் ரூ.82.5 லட்சம் ரொக்கம், 16 சொகுசு கார்கள் பறிமுதல்
சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் ரூ.82.5 லட்சம் ரொக்கம், 16 சொகுசு கார்கள் பறிமுதல்
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்குச் சொந்தமான சென்னை வீட்டில் இருந்து 82.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 16 சொசுகு கார்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக 2017 ஆம் ஆண்டில் கைதான சுகேஷ் சந்திரசேகர், பல ஒப்பந்தங்களை முடித்து கொடுப்பதாக டெல்லி தொழிலதிபர்களிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பங்களா வீட்டில் டெல்லி அமலாக்கத் துறையினர் 7 நாள்கள் சோதனை நடத்தினர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாத 16 சொகுசு கார்கள், 2 கிலோ தங்கம், கணக்கில் வராத 82 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு, பங்களாவுக்கு சீல் வைத்தனர்.
சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தப்போதும் ஏமாற்றுவதை விடவில்லை என்று அமலாக்கத்துறை தகவல் கூறியுள்ளது. இதனிடையே சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.