திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 62 பயணிகளின் உயிரை காப்பற்றி உயிர்விட்ட அரசு பேருந்து ஓட்டுநர்!

அருப்புக்கோட்டை அருகே 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நிலையில் பேருந்திலேயே உயிரிழந்தார்.
driver
driverpt desk

மதுரை அயிராதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகேஸ் ராஜா (53) - மங்கையர்கரசி தம்பதியர். இவர்களுக்கு, ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். முருகேஸ் ராஜா மதுரை சிப்காட் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த 12 வருடமாக ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்

govt bus
govt buspt desk

இந்நிலையில், நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து நடத்துனர் திருப்பதி என்பவருடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு, அங்கிருந்து 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் மதுரை நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார் முருகேஸ் ராஜா. அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சாய்பாபா கோவில் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது முருகேஸ் ராஜாவிற்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உயிர்போகும் தருணத்திலும் பேருந்தில் 62 பயணிகள் இருப்பதை உணர்ந்த அவர் உடனடியாக பேருந்தின் வேகத்தை குறைத்து பேருந்தை ஓரமாக நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது பேருந்து மெதுவாக செல்வதை உணர்ந்த நடத்துனர் திருப்பதி, உடனடியாக பிரேக்கை அமுக்கி பேருந்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து பேருந்து ஓட்டுனர் முருகேஸ் ராஜா அப்படியே சாய்ந்து விழுந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் பேருந்து ஓட்டுனர் முருகேஸ் ராஜாவுக்கு முதலுதவி அளித்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ பணியாளர் முருகேஸ் ராஜாவை பரிசோதித்துள்ளார். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

hospital
hospitalpt desk

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 62 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி ஓடும் பேருந்திலேயே ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com