“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன்”-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி..!
டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலேயே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா, ஐ.டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐடி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர், குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார்.
தற்போது அத்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம், சார் ஆட்சியர் பணியை தேர்வு செய்ய இருப்பதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து அர்ச்சனா கூறும்போது, ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தயாராவேன் என தெரிவித்தார்.
குரூப் 1 தேர்வில் 181 பணியிடங்களுக்கான இறுதி முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது. குரூப் 1 தரவரிசையில் முதல் 8 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்ததக்கது. இவர்கள் தங்களது பணியிடங்களை தேர்வு செய்தவற்கான கலந்தாய்வு வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.