சுதந்திர தின விழாவில் பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் 74-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி வைப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்டம் தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல் சமூக நலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்படுகிறார். முன்களப்பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார். சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் வரவேண்டாம், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டு/கேட்டு ரசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.