பள்ளியில் விஷவாயு... சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி மயக்கம்

பள்ளியில் விஷவாயு... சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி மயக்கம்
பள்ளியில் விஷவாயு... சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி மயக்கம்

விஷவாயு தாக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மாணவர்களில் மீண்டும் 9 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் நேற்று மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மணி அளவில் பள்ளி அறைக்குள் சென்றபோது, சற்றுநேரம் கழித்து நடுநிலைப் பள்ளியின் 6ஆவது மற்றும் 7ஆவது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண் பார்வை மங்கலாகவும், ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்து ஒருவருக்கு பின் ஒருவர் மயங்கி கீழே விழுந்தனர்.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்து, ஆம்புலன்ஸ் மூலமாக பள்ளி மாணவர்களை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இரவு 3 மாணவர்கள் தவிர்த்து அனைவரும் வீடு திரும்பினார்கள்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல் துறை, தீ அணைப்பு துறை, மருத்துவ துறையினர் மற்றும் மாசுகட்டுப்படு வாரியம், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் வானவர் ரெட்டி செய்தியாளர் சந்திப்பில், “இந்த நிகழ்வு நடந்ததாக தகவல் வந்ததன் அடிப்படையில் பள்ளியில் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த சம்பவத்திற்கு முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த காரணத்தை கண்டறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் துறை மற்றும் வருவாய்த்துறை மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 9 மாணவர்கள், மீண்டும் வாந்தி மயக்கம் வருவதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com