பெரம்பலூர்: பேருந்தில்லாததால் 4.5 கி.மீ காட்டுவழியில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்
பெரம்பலூர் அருகே பேருந்து வசதி இல்லாததால் தினமும் 4 கிலோமீட்டர் நடந்தே சென்று சிரமத்தை சந்தித்து வருகின்றனர் அரசுபள்ளி மாணவர்கள். தங்களின் சிரமத்தை சரிசெய்யும் வகையில், பள்ளி செல்லும் நேரத்தில் தங்கள் பகுதிக்கு பேருந்து இயக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அவர்கள்.
பெரம்பலூர் அருகே மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு சிறு கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் குரும்பாபாளயம் கிராமத்தில் இருந்து சுமார் 50 மாணவர்கள் மருவத்தூர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளி காலை 9.30 க்கும் தொடங்கும் நிலையில் குரும்பாபாளையத்தில் இருந்து மருவத்தூர் செல்ல குறித்த நேரத்திற்கு அரசு பேருந்துவசதி இல்லை. இதனால் தினமும் காலையில் 4 கிலோமீட்டர் நடந்தே சென்று பள்ளிக்கு செல்ல வேண்டிய சிரமம் இருப்பதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் மழைகாலங்களில் பள்ளிக்கு செல்லமுடியாத சூழல் ஏற்படுவதாக மாணவர்கள் கூறுகின்றனர். காட்டுப்பகுதியில் நடந்து செல்லும் போது அச்சத்துடன் செல்வதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்துவருவதாக தெரிவிக்கும் அவர்கள், குரும்பாபாளையத்திலிருந்து மருவத்தூர் வழியாக காலை 9.30க்கு இயக்கப்படும் அரசு பேருந்தை 30 நிமிடம் முன்னாதாக இயக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்
- ஆ.துரைசாமி

