ராசிபுரம் அடுத்த வரகூர் கோம்பை, செக்கிடி, கரியாம்பட்டி பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி அறிவுரை வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஊனாந்தாங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட வரகூர்கோம்பை. செக்கடி, காரியாம் பட்டி, புதுவலவு, குட்டகாடு, கீரக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்பில் படிக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இந்நிலையில் செல்போன் டவர் சிக்னல் கிடைக்காததால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அருகிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேலே ஏறி ஆபத்தான முறையில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முயற்சி மேற்கொண்டனர்.
இதனை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை தடுத்து நிறுத்தி இதுபோல ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த பகுதிக்கு செல்போன் சிக்னல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.