கோவை | வேறு மாணவர்களுடன் பேசக்கூடாது.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவன்!
கோவை சரவணம்பட்டி பகுதியில், பொறியியல் கல்லூரி மாணவியை அதே வகுப்பைச் சேர்ந்த மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மற்றவர்களுடன் பேசக்கூடாது என வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன், அதே வகுப்பைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவர் நண்பராக பழகி வந்ததாக தெரிகிறது. இருவரிடையே மற்ற மாணவர்களுடன் பேசுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஹர்ஷவர்தன் அந்த மாணவியை வேறு சில மாணவர்களுடன் பேசக்கூடாது என அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்தபோது இருவரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மாணவியின் கழுத்து கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார்.
இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த அந்த மாணவி அதே கல்லூரி குழுமத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
வன்முறை சார்ந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை..
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையம் பின்புறம் ஆண் நண்பர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பது போல் வன்முறையும் எதற்கும் தீர்வல்ல என்பது குறித்து இளைய தலைமுறை மாணவர்களுக்கு அழுத்தமாக மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

