“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..!

“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..!
“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” -  பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..!

மதுரையில் பள்ளி மாணவர்கள் மோதல் விவகாரத்தில், முதுகில் பிளேடால் கிழிக்கப்பட்ட மாணவன் சரவணக்குமாருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தாய் இராத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மதுரை அருகே பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகப் பையை மறைத்து வைத்து விளையாடியதில் சக மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 9-ம் வகுப்பு மாணவன் மகா ஈஸ்வரன் பிளேடால் கிழித்ததில், பட்டியலின சக மாணவன் சரவணக்குமார் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இவ்விவகாரம் தொடர்பாக தாய் இராத்தி சரவணக்குமாருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தங்கள் பகுதியான பாலமேடு மறவர்பட்டி காலனியில் ஏற்கெனவே சாதியை காரணம் காட்டி சிறு சிறு பிரச்சனைகள் நடந்து வருகிறது. சைக்கிளில் பள்ளிக்கு சென்றால் காற்றை பிடுங்கி விடுவது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னப் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைத்தோம். பள்ளிக்கு சென்ற எனது மகனின் புத்தகப் பையை ஒளித்து வைத்ததை திரும்பி கேட்டதற்காக பிளேடால் முதுகில் இரத்தக் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். வெறும் 500 ரூபாயை கொடுத்துவிட்டு, வழக்கு போட வேண்டாம் என மகா ஈஸ்வரன் பெற்றோர் கூறுகின்றனர்.

ஊருக்குள் இருக்க வேண்டுமா? வேண்டாமா? எனக் கேட்கின்றனர். காவல்துறையில் புகார் அளித்ததால் மகா ஈஸ்வரன் குடும்பத்தினர் தனக்கு அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர். ஊருக்குள் நடமாட முடியாது, தண்ணீர் பிடிக்க முடியாது, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாது என அச்சுறுத்துகின்றனர். 

என் மகனுக்கு நடந்ததுபோல வேறு எந்த மாணவனுக்கும் நடக்கக்கூடாது. எனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக சரவணக்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிளேடால் சக மாணவனை தாக்கிய மகா ஈஸ்வரன் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com