தஞ்சை | விஜய் வாகனத்தை பின் தொடர்ந்ததில் விபத்துக்குள்ளான மாணவர்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மாத தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கிருந்து சாலை வழியாக தஞ்சாவூர் நோக்கிச் சென்றார். அப்போது, அவரது வாகனத்தை இளைஞர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர். விஜயின் வாகனம் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வளம்பக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் வாகனம் மீது விஜயை பின் தொடர்ந்து வந்த இளைஞர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், தனியார் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அருணுக்கு இடுப்பு முறிவு ஏற்பட்ட நிலையில், விக்னேஷ்-க்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதன்காரணமாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விக்னேஷ் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் தான், 19 நாட்களாக மாணவர் விக்னேஷ் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

