விடுதலை அல்லது சாகும் வரை போராட்டம்: தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்யும் இலங்கை தமிழர்கள்
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை தமிழர்கள் அனைவரும் உணவு உண்ண மறுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களில் 10வது நாளாக முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிரூபன், முகுந்தன் இருவரின் உடல் நிலையையும் மருத்துவக் குழுவினர் இன்று சோதனை செய்தனர். அவர்களின் இதயத் துடிப்பு, 50க்கும் கீழாக குறைந்த நிலையில், இருவரும் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் இருந்தது. இருப்பினும் அவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
அதையடுத்து, காவல்துறையின் உதவியுடன் இருவரும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு சென்றாலும், 'விடுதலை அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் என்பதே தங்களது நிலைப்பாடு' என்பதில் இருவரும் உறுதியாக இருக்கின்றனர்.