இந்து, முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "மாநாடு திரைப்படத்தில் காவல் துறையினரை தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கோவை குண்டு வெடிப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது. இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக மாநாடு படம் அமைந்துள்ளது. மத அடையாளங்கள் படத்தில் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, வன்முறையை தூண்டும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. மாநாடு பட விவகாரத்தில் முதல்வர் தலையிட செய்ய வேண்டும், சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.
மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். படத்தை தடை செய்யவில்லை என்றால் பாஜக போராடும், மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுள்ளது.
முதல்வர் கையில் உள்ள காவல்துறை செயல்படாமல் உள்ளது. பாஜக புகாரில் காவல்துறை நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நகர்புற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். பொய் பிரச்சாரம் மூலம் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. திமுக ஆட்சிக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும்” எனக் கூறினார்.