’இனி கடைசி பென்ச் என்ற முறை இல்லை..’ அரசுப் பள்ளியில் ‘ப’ வடிவ இருக்கை.. சாதகமா? பாதகமா?
தமிழக பள்ளிகளின் வகுப்பறைகளில் ப வடிவத்தில் இருக்கைகளை மாற்றி, மாணவர்களை அமரவைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடைசி பென்ச் என்ற நடைமுறை இருக்கக் கூடாது என்றும், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ப வடிவ நடைமுறை சாதகமா பாதகமா? பின்னணி என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
ப வடிவ நடைமுறை சாதகமா?
கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது. மாணவர்களை 'ப' வடிவில் அமர வைப்பதன் மூலமாக அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும், மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, ஆசிரியரைக் கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் இந்த திட்டத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படம், கடைசி பென்ச் இருக்கைகளில் அமர்வதால் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறியதை, அடுத்து கேரளத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் வரிசையாக அமர்வதற்கு பதிலாக, அரைவட்ட வடிவில் அல்லது 'ப' வடிவில் அமர வைக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது கேரள அரசு. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் தற்போது மாணவர்களை 'ப' வடிவில் அமரவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவ மாணவிகள் வரிசையாக பெஞ்ச்களில் அமரவைக்கப்படும் நடைமுறையே இருந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 37 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு பள்ளியின் மாணவர் சேர்க்கையைப் பொறுத்து, வரிசை முறை இருக்கைகளுக்கே இடப்பாற்றக்குறையும் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில், ப வடிவ இருக்கை என்ற முறை வரும்போது, வகுப்பறை கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை குறித்தான சாதக பாதகங்கள் பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரனிடம் பேசினோம், அப்போது, இந்த நடைமுறையில் சிக்கல்களும் இருக்கின்றன. பள்ளி வகுப்பறையை அதற்கேற்றார்போல் மாற்ற வேண்டிய சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்.