"பதவியைக் காத்துக் கொள்ளவே வேளாண் சட்டங்களுக்கு முதல்வர் ஆதரவு" - ஸ்டாலின் தாக்கு
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஆதரித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதாக்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளித்ததோடு, அதனால் பாதிப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருப்பது அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில் மிகவும் மோசமானதாகும்.
வேளாண் மசோதாக்களை அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே ஆதரிக்கிறது. ஆட்சியையும், பதவியையும் காத்துக்கொள்ளவே வேளாண் மசோதாவை ஆதரித்தேன் எனக் கூறி விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்டிருக்கலாம். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பேசியுள்ளார். மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என்பது நகைச்சுவை. தன்னையும், அமைச்சர்களையும் காத்துக் கொள்ளவே சட்டங்களை ஆதரித்ததாகக் கூறி விவசாயிகளிடம் முதலமைச்சர் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.