ரூ2.27கோடி லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு பதவி உயர்வா?: திமுக அரசுக்கு இபிஎஸ், தினகரன் கண்டனம்
வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என சொல்லும் மு.க.ஸ்டாலின் அரசு, ரூ.2.27கோடி லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ வெளிப்படையான,ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என விளம்பர படம் எடுக்கும் மு.க.ஸ்டாலின். 2.27கோடி ரூபாய் லஞ்சமாக பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் வழங்கியுள்ளது , இதுதான் அந்த கடமை தவறுவோர் மீது தவறாமல் எடுக்கப்படும் நடவடிக்கையா?” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் மற்றும் நகைகளுடன் சிக்கி, கைது செய்யப்பட்ட பொதுப்பணித் துறை பெண் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தி.மு.க ஆட்சியில் லஞ்ச, ஊழல் எந்த அளவிற்கு புரையோடியிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கியவருக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே பதவி உயர்வு கொடுத்து புதிய உலக சாதனை(?!) புரிந்திருக்கிறது விடியல் அரசு. தி.மு.க.வின் வழக்கப்படி ஊழலில் அவர்கள் செய்யப் போகும் இத்தகைய சாதனைகள் இனி ஒவ்வொன்றாக வெளிவரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

