’எங்க வீட்டுப் பிள்ளை’ பாடலை மேற்கோள்காட்டி தமிழக அரசுமீது ஸ்டாலின் விமர்சனம்
’எங்க வீட்டுப் பிள்ளை’ பாடலை மேற்கோள்காட்டி ஸ்டாலின், கமல் இருவரும் ஆளும் கட்சியை விமர்சித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில், திமுகவின் தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டத்தில் காணொலி மூலம் ஸ்டாலின் பேசினார். அதில், அதிமுக ஆட்சியில் கடலூர் மாவட்டம் கவனிக்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் அதிமுகவை விமர்சித்த திமுக தலைவர், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக முதல்வர் கூறுகிறார்; ஆனால் சிதம்பரம் கோயிலில் மழைநீர் தேங்கியது. முதல்வருக்கு மக்களைப் பற்றிய அன்பு இல்லை; தொலைநோக்குப் பார்வையில்லை என்றார்.
அதைத் தொடர்ந்து, எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடலான, ’’சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்; ஒரு மானமில்லை; அதில் ஈனமில்லை; அவர் எப்போதும் வால் பிடிப்பார்; எதிர்காலம் வரும் என் கடமை வரும், இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’’ என்ற பாடலை பாடிய ஸ்டாலின், எம்ஜிஆரின் இந்த பாட்டு தற்போது ஆட்சியில் இருக்கும் கூட்டத்திற்கு பொருந்தும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்கும் தேர்தல் இது; பணி முடிப்போம்; ஆட்சி அமைப்போம் என்று பேசி முதல்வரை விமர்சித்தார்.
கடலூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் இந்த பாடலை பாடிய பிறகு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் அதே பாடல் வரிகளை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.