வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் பல அடி உயரத்திற்கு மழைநீர்: பொதுமக்கள் அவதி
சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவும் மழை கொட்டித் தீர்த்தது. கடந்தாண்டு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் இந்தாண்டு சென்னை உள்பட பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மனதளவில் மகிழ்ச்சி அடைந்தாலும், இயல்பு வாழ்க்கையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் போல் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர பல தெருக்களிலும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் வீட்டை விட்டே பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். சென்னை கொரட்டூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதனிடையே, சென்னை வியாசர்பாடியில் உள்ள ஜீவா சுரங்கப்பாதையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், சுரங்கப்பாதையில் மாநகரப் பேருந்து ஒன்றும் சிக்கியது. பின்னர் அந்த பேருந்து மீட்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த இடத்தில் மழை நீர் தேங்குவதாக கூறும் பொதுமக்கள் ஆனால் மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் முன்வருவதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.