நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால், ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பிரிட்டனில் உருமாறிய கொரோனா தமிழகத்திலும் பரவும் அபாயம் இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.
இந்தச் சூழலில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும்" என்றார்.
அரசின் கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இடம் பெற்ற விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பேராசிரியர் ஒருவரின் தவறால் திருவள்ளுவர் படம் காவியில் இடம் பெற்றுவிட்டது. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பேராசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய முடியாது" என்றார்.