ஸ்ரீபெரும்புதூர் | அட்டை உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
செய்தியாளர்: கோகுல்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் டி.ஜி.ஐ., பேக்கிங் என்ற பெயரில் அட்டை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அட்டைகள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில், உற்பத்தி செய்யப்பட்ட அட்டைகளை சேமித்து வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. சில மணி நேரத்தில், குடோன் தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு அடுத்தடுத்து தீ பரவியது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள், தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதையடுத்து கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். விபத்தில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. சோமங்கலம் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.