நாகை | அடுத்தடுத்து தாக்குதல்.. 19 மீனவர்கள் காயம் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்
செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் உட்பட மொத்தம் 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அதிவேகமாக படகில் வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்திமுனையில் தாக்குதலை நடத்தி விட்டு, வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதேபோல அடுத்தடுத்து தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் மற்றும் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதையடுத்து காயமடைந்த 19 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், படுகாயமடைந்த மீனவர்கள் கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரைத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து வெள்ளப்பள்ளம் மற்றும் செருதூர் மீனவர் கிராமங்களில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.