இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் நல்லடக்கம்
இலங்கை கடற்படை கப்பல் மோதியதியதால், படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நல்லடக்கம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்த போது இலங்கை கடற்படை கப்பல் மோதியது. அதில், சுகந்தன், சேவியர் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உடற்கூராய்வுக்கு பிறகு இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ராஜ்கிரண் உடல் கொடுக்கப்பட்டது. அதன்பின், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல், சர்வதேச எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து படகில் வைத்து கொண்டுவரப்பட்ட ராஜ்கிரணின் உடல், கோட்டைப்பட்டினத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராஜ்கிரணின் உடலுக்கு அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையையும் அவர் ராஜ்கிரண் குடும்பத்தினரிடம் வழங்கினார். இதையடுத்து ராஜ்கிரண் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருமணமான 40 நாட்களிலேயே கணவரை பறிகொடுத்துவிட்டு, ராஜ்கிரணின் மனைவி கண்ணீர் கடலில் தத்தளித்து வருகிறார்.