தவக்காலத்தில் இறைவனுக்கு அசைவ அன்னதானமிட்டு மக்கள் பசியாற்றும் புதுக்கோட்டை தேவாலயம்!

தவக்காலத்தில் இறைவனுக்கு அசைவ அன்னதானமிட்டு மக்கள் பசியாற்றும் புதுக்கோட்டை தேவாலயம்!
தவக்காலத்தில் இறைவனுக்கு அசைவ அன்னதானமிட்டு மக்கள் பசியாற்றும் புதுக்கோட்டை தேவாலயம்!

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் தடபுடலாக அசைவ அன்னதானம் சமைத்து அதை அன்னதானமிட்டு வழிபடும் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வெள்ளை மரியாள் ஆலயத்தில் நடக்கிறது. அனைத்து மதத்தினரும் வழிபடும் 327 ஆண்டு பழமையான மதநல்லிணக்க ஆலயமாகவும் இது உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்கால நாட்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தவக்காலம் ஐந்தாம் நாளான கடந்த 03.04.2022 மற்றும் 10.04.2022ம் தேதிகளில் கல்லறை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுவாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் இந்த தவ காலங்களில் எவ்வித சுபகாரியங்களையும், திருவிழாக்களையும், கொண்டாட்டங்களையும் திட்டமிட மாட்டார்கள். கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையும் முன் உள்ள இந்த 40 நாட்கள் நோன்பு தினமாகவே அனுசரிக்கிறார்கள். முக்கியமாக அசைவ உணவை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

ஆனால் இலுப்பூரில் உள்ள வெள்ளை மரியாள் ஆலயத்தில் தவக்கால நாட்களில், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மதத்தினரும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு அதற்கு காணிக்கையாக அங்குவந்து ஆடு, கோழி வெட்டி சமைத்து அன்னதானமிடுகின்றனர். கிறிஸ்தவர்கள் தவக்காலங்களில் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஆனால் இங்கு இந்து, இஸ்லாமியர் ஏராளமானோர் தமிழகம் முழுவதும் இருந்து ஆலயத்திற்கு வந்து அசைவ உணவே சமைத்து உண்ணுகின்றனர்.

 இந்த ஆலயத்தில் கோழி காணிக்கை கொடுப்பது மொட்டையடித்து காது குத்துவதும் வேண்டுதல்களில் ஒன்றாக உள்ளது. எங்கு பார்த்தாலும் வயல்வெளிகளிலும் மரத்தடியிலும் உணவை சமைத்து மற்றவர்களுக்கு கொடுக்கும் இவர்களின் இந்த வினோத வேண்டுதல் ஜாதி மதங்களை கடந்து அனைவரும் இங்கே சமம் என்பதை அனைவரும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

முக்கியமாக இந்த ஆலயத்தின் அருட்தந்தை ஆரோக்கியராஜ் இத்திருவிழா 327 ஆண்டுகளாக திருவிழா நடைபெறுவதாக குறிப்பிட்டார். வெள்ளை மரியாள் உயிர்நீத்த அவருடைய கல்லறை சிறிய ஆலயமாக உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு தான் தவக்காலமாக இருந்தாலும், இங்கே அந்த மரபு எல்லாம் மாறி தங்களது வேண்டுதலுக்காக அன்னதானமிட்டு ஜாதி மத பேதங்களை தாண்டி அவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்கிறார்.

இந்த ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களிலும், வேன்களிலும் வரும் காட்சிகளை காண முடிகிறது. எங்கு பார்த்தாலும் உணவுகளை சமைத்து மற்றவர்களுக்கு அளவில்லாமல் உணவு வழங்குகின்றனர். மற்ற மதத்தினரும் தாங்கள் இங்கு வந்தபொழுது தங்களுக்கான வேண்டுதல்களை கேட்டு நிறைவேறிய பிறகு அதற்கு காணிக்கையாக அசைவ உணவுகளை சமைத்து மற்றவர்களுடன் சாப்பிடுவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள்.

அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் ஒரே உணர்வுடன் குடும்ப உறவுகள் இங்கே உள்ளனர். பொதுவாக கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் இதுபோன்ற திருவிழா அதுவும் ஆடம்பரமாக அனைத்து மதத்தினரும் வந்து அசைவ உணவை சமைத்து சாப்பிட்டு மற்றவர்களுக்கும் வழங்கி மகிழ்வுடன் செல்வது இந்தியாவிலேயே இந்த ஒரு ஆலயம் தான் என பெருமைப்படுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள்.

வி.சார்லஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com