சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை பிடிப்பதற்காக தனிப்படை டெல்லி விரைந்துள்ளதாக இணை காவல் ஆணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விமானம் மூலமாக டெல்லியிலிருந்து சென்னை வந்து தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த தகவல் அடிப்படையில் தனிப்படை டெல்லி சென்றுள்ளதாக கூறினார். அவர்களிடமிருந்து 25 சவரன் நகையும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் 23 வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்றும் இணை ஆணையர் தெரிவித்தார். தொடர் கண்காணிப்பிற்காக சென்னையில் 3ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமானவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை கிழக்கு இணை ஆணையர் மனோகரன் தெரிவித்தார்.