சொத்தை வாங்கிக்கொண்டு தந்தையைக் கைவிட்ட மகன்கள் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி

சொத்தை வாங்கிக்கொண்டு தந்தையைக் கைவிட்ட மகன்கள் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி
சொத்தை வாங்கிக்கொண்டு தந்தையைக் கைவிட்ட மகன்கள் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி

தந்தையிடம் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு கைவிட்ட மகன்களிடம் இருந்து மீண்டும் சொத்துக்களை வாங்கி தந்தையிடமே ஒப்படைத்த வருவாய் கோட்டாட்சியரின் நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகோபால்(82). இவருக்கு 3 ஆண் பிள்ளைகள், 3 பெண்பிள்ளைகள். கடந்த 2008-ம் ஆண்டு ரேணுகோபாலின் மனைவி உயிரிழந்ததையடுத்து தந்தையை தாங்களே பார்த்துக்கொள்வதாகக் கூறி அவரது 3 மகன்கள், மகள்களிடம் இருந்து ரைஸ் மில் உட்பட  கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளனர்.

ஆனால் தந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்ற மூன்று மகன்களும் ரேணுகோபாலை சரிவர கவனிக்காமால் வீட்டை விட்டு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து கோபால் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷிடம் புகார் அளித்து தனது சொத்துக்களை மீட்டுத்தருமாறு கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சிர் மகன்களிடம் இருந்து 1 கோடி மதிப்பிலான சொத்துக்களைத் திரும்பப் பெற்று அதை ரேணுகோபாலிடம் வழங்கினார்.

இது குறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் “சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் எந்த நேரமும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். நேரில் வர முடியாதவர்கள் பதிவு தபாலில் அனுப்பலாம். உரிய விசாரணைக்கு பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் வருவாய் கோட்டத்தில் இது வரை பெறப்பட்ட 35 மனுக்களில் 2 மனு மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அதே சமயம் சொத்தை மீட்டு கொடுத்த பெற்றோருக்கு பிள்ளைகளாலும், மற்றவர்களாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு அளிக்கவும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திர்க்கு அறிவுறுத்தப்படும்” என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com