
மதுரையில் குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகன் தன்னை கொலை செய்ய முயல்வதாக கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது கணவர் செல்லத்துரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், 3 மகன்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மூத்த மகன் குமார் (18) சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மகன், தாய் பாக்கியம் மற்றும் அவரது இளைய சகோதரன் நாகராஜை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குமாரிடமிருந்து தப்பிவந்த தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்துநிறுத்தி விசாரணை நடத்துவதற்காக தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தாய் பாக்கியம் கொடுத்த புகாரையடுத்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக குமாரை தேடி வருகின்றனர்.