தந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..!

தந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..!
தந்தையை கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற மகன்..!

கோவை அருகே தந்தையை மகனே கொலை செய்து வீட்டில் புதைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சின்னக்கள்ளிப்பட்டி கிராமம், சண்முகாபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மாகாளி(60). இவரது மனைவி பூவாள், 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் சிவராஜ் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வந்தார். தந்தை மாகாளிக்கும் மகன் சிவராஜ்க்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு சிவராஜ் குடிபோதையில் தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.  போதையில் இருந்த சிவராஜ் ஆத்திரமடைந்து தனது தந்தையை அடித்துக்கொலை செய்துள்ளார். இதையடுத்து தந்தையின் உடலை மறைக்க வீட்டிற்குள்ளேயே புதைக்க இரவோடு இரவாக குழி தோண்டியுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மாகாளியின் வீட்டை நோக்கி வந்தபோது சிவராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மாகாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சிவராஜையும் கண்டுபிடித்து கைது செய்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com