திருத்தணியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்ததால் வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை இன்று வழக்கம் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. பிற்பகல் 12 மணி அளவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் இருந்தனர். அப்போது வங்கி வாசலில் இருந்த குடிநீர் தொட்டியிலிருந்து சுமார் மூன்று அடி உயரம் கொண்ட நல்ல பாம்பு ஒன்றுவங்கியில் நுழைந்தது.
இதனைக் கண்ட வாடிக்கையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓட்டம் பிடித்தனர். வங்கி அலுவலர்களும் பீதி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வங்கியில் புகுந்த நல்ல பாம்பை சுமார் அரைமணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர்.
இதனை அடுத்து வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தனர். பின்னர் தீயனைப்பு வீரர்கள் நல்ல பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். வங்கியில் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் வங்கியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.