விவசாயி ஸ்மார்ட் கார்டில் ஆணுக்கு பதில் பெண்ணின் புகைப்படம்: தொடரும் குளறுபடி
விவசாயிக்கு புதிதாக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் ஆணுக்கு பதில் பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. மேலும் புகைப்படத்தை மாற்றுவதிலும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு
எனப்படும் நவீனமுறையை அரசு கொண்டு வந்தது. அதில் குடும்பத் தலைவருக்கு பதிலாக விநாயகர் படம் இடம்பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு
திட்டம் தோல்வியை சந்தித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூரை சேர்ந்தவர் விவசாயி முருகையன் (70). இவருக்கு ஏழாம்பால் என்ற மனைவியும் ரவிச்சந்திரன் என்ற
மகனும் உள்ளனர். முருகையனுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டில் குடும்பத் தலைவரான அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்மணியின்
புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதனால் முருகையன் குடும்பத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.
பொருட்கள் வாங்க நியாயவிலைக் கடைக்கு சென்றால் புகைப்படத்தை மாற்றினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படத்தை மாற்ற வட்டாச்சியர் அலுவலகத்தை அணுகினால் அங்கு புகைப்படத்தை மாற்றுவதில் சிக்கல் உள்ளதாக கூறி அலைக்கழிக்கப்படுவதாக முருகையன் குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் வயது மூப்பு காரணமாக தன்னால் அலைய முடியவில்லை என்றும் தீபாவளி நெருங்கிவிட்டநிலையில் பொருட்கள் வாங்க முடியாமல் அவரது குடும்பத்தினர் சிரமப்படுவாதாகவும் முருகையன் தெரிவிக்கின்றார்.