\
காலணி வீசப்பட்ட சம்பவம் ஏற்புடையது அல்ல: மு.க.ஸ்டாலின்

காலணி வீசப்பட்ட சம்பவம் ஏற்புடையது அல்ல: மு.க.ஸ்டாலின்

காலணி வீசப்பட்ட சம்பவம் ஏற்புடையது அல்ல: மு.க.ஸ்டாலின்
Published on

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம், தமிழர்கள் போற்றிப் பாதுகாத்து வரும் பண்புக்கு துளியும் ஏற்புடையது அல்ல என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்கு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துக் கட்சிகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்தால் சேலம் மாநகரம் மட்டுமின்றி தமிழக மாணவர் சமுதாயமே சோகத்தில் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சில சமூக விரோதிகள் இதுபோன்ற நிகழ்வுகளில் உட்புகுந்து, அரசியல் தலைவர்களைக் குறி வைப்பதையும், குறிப்பாக மத்திய இணையமைச்சர் மீது காலணி வீசி, தமிழகத்தின் பெருமையை சீர்குலைக்க முயற்சிப்பதை நாகரீக சமுதாயத்தில் இருக்கும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தும் இது போன்றதொரு சம்பவம் நடப்பதற்கு எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறையின் திறமை மெல்ல மெல்ல சாகடிக்கப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியவர்கள் மீது, காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நடக்காதவாறு தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் டி.ஜி.பி.க்கு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com