சிவகங்கை | எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி பரப்புரை.. பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு.!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் பரப்புரை செய்து வருகின்றனர். அந்த வகையில் தான், சிவகங்கை அரண்மனை வாயில் அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான கே. பழனிச்சாமி இன்று மாலை பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து, புதுக்கோட்டையில் பரப்புரை மேற்கொள்வதற்காக கிளம்பிச் சென்றார்.
மதகுப்பட்டி மேலத் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (27) என்ற இளைஞர் கோவில் திருவிழாவை பார்க்க தனது இருசக்கர வாகனத்தில் மதகுப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிர்கட்சித் தலைவர் கே. பழனிச்சாமியுடன் பாதுகாப்பிற்காகச் சென்ற லோக்கல் எஸ்கார்ட் போலீஸ் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுப்பட்டி போலீசார் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிச்சாமி பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

