ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்திற்கு ஆபத்தானது: சென்னை உயர்நீதிமன்றம்
ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்திற்கு ஆபத்தானது என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் தண்டனை வழங்குவதுடன், ஆண்மைப் பறிப்பு தண்டனையும் வழங்க வேண்டும் என 2015 உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கிரிஜா ராகவன் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அதாவது:- “ குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு வெளிநபர்கள் மட்டுமே காரணம் அல்ல. பெற்றோரும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியின் பெற்றோர் என்ன செய்தனர்...? தன் மகளை கூட கவனிக்க முடியாதா..?
கூட்டு குடும்ப முறை ஒழிந்ததால், பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்றாகி விட்டது. இதில் சில நன்மை இருந்தாலும், சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்தில் உருவாகியுள்ளது. விவகாரத்து பெற்றுக்கொண்ட பின்னர் குழந்தை தாய் இல்லாமல் தந்தையிடமோ, அல்லது தந்தை இல்லாமல் தாயுடனோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் சமுதாயத்தில் அவர்களின் நடத்தையிலும் மாற்றம் உண்டாகிறது. எனவே ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்திற்கு ஆபத்தானது. தாய், தந்தையுடன் குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.
மேலும் பேசிய நீதிபதி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகத்தை பிரித்து, குழந்தைகள் மேம்பாட்டுக்கு என தனி அமைச்சகத்தை ஏன் அமைக்க கூடாது என மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். நிர்பயா நிதி கீழ் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஏதேனும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆகஸ்ட் 17-ம் தேதி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.