3 நாட்களில் சிங்கார சென்னை 2.0 - மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா அப்டேட்

3 நாட்களில் சிங்கார சென்னை 2.0 - மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா அப்டேட்
3 நாட்களில் சிங்கார சென்னை 2.0 - மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா அப்டேட்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மூலம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு மாத கால பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டன. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, “தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் வகையில் சென்னை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அமெரிக்கா துணைத் தூதரகம் இரண்டு மாதம் பயிற்சி முகாம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிகளை பொறுத்தவரையில் பல்வேறு திட்டங்கள் மூலம் பணி நடைபெற்று வருகிறது. முக்கியமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. மீதமுள்ள மழை நீர் வடிகாலின் இணைப்பு பணிகளை வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இரவு பகலாக சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி தான் மிகவும் முக்கியமானது. கடந்த மழைக்காலத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து அந்த இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டால் பொது மக்களுக்கு உணவு வழங்குவதற்கான மண்டல வாரியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பத்தாயிரம் நபர்களுக்கு உணவு வழங்கும் வகையில் உணவுக்கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி. “சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பணியை விரைவுப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளனர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com