கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படும் பெண் அவர் மீது தமக்கு எந்தப் புகாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
சித்தராமையா மைக்கை பிடுங்கிய மைசூர் ஜமாலா என்ற பெண், சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், சித்தராமையாவிடம் தாம் சில குறைகளை தெரிவித்ததாகவும், அவரிடம் முரட்டுத்தனமாக பேசியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். தாம் மேஜையில் தட்டி பேசியதால் தான் சித்தராமையா கோபமடைந்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தராமையா, ஒரு தொண்டர் மட்டும் அதிக நேரம் எடுத்துக்கொள்வதை தடுப்பதற்காக முயன்றபோது அந்த சம்பவம் தற்செயலாக நடந்ததாக கூறியுள்ளார். அந்தப் பெண்ணை தமக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும் என கூறியுள்ள சித்தராமையா, அவர் தமது சகோதரி போன்றவர் எனக் குறிப்பிட்டார். இந்த விஷயத்தை அரசியலாக்கி பாரதிய ஜனதா கட்சி அந்தப் பெண்ணை அவமானப்படுத்தியிருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். முன்னதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பொது இடத்தில் பெண் ஒருவரிடம் இருந்து மைக்கை பறித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.