மனநலம் பாதித்த இளைஞர் கொலை.. குற்றவாளிகள் இடமிருந்து நகை, பணம் கையாடல் செய்த SI கைது!
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 22 வயது இளைஞர் வருண் கான் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான கவிதா, அவரது கணவர் லட்சுமணன், இரண்டு மகள்களான ஸ்ரேயா, சுருதி மற்றும் மற்றொரு பங்குதாரரான சாஜி முதலிய ஐந்து பேர் தலைமறைவாகினர்.
இவர்களை தேடிப்பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடப்பட்டுவந்த நிலையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐந்து குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
SI கைது செய்யப்பட்டது ஏன்?
குற்றவாளிகளை கைது செய்தவுடன் அவர்கள் அணிந்திருந்த 18 சவரன் நகை மற்றும் ரூபாய் 1,50,000 லட்சம் பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளார். அப்படி குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்ற நகை போன்ற பணத்தை, மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
ஆனால் உதவி ஆய்வாளர் அப்படி செய்யாமல் நகை மற்றும் பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்ற பொருட்கள் அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் வழக்கு முடிந்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் குற்றவாளிகளின் உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு நவநீதகிருஷ்ணன் மீது கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகள் இடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை கையாடல் செய்து காவல் உதவி ஆய்வாளரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.