'கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை!"- தேர்தல் ஆணையம் மீது சென்னை ஐகோர்ட் காட்டம்

'கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை!"- தேர்தல் ஆணையம் மீது சென்னை ஐகோர்ட் காட்டம்
'கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை!"- தேர்தல் ஆணையம் மீது சென்னை ஐகோர்ட் காட்டம்

'தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை' என்று கடுமையைக் காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்,
'கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாவிட்டால், வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ளது.

கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, வாக்குப்பதிவு நாளன்று கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அப்போது, "பிரசாரம் தொடங்கிய நாட்களிலிருந்து வேற்று கிரகத்தில் இருந்தீர்களா?" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசியல் கட்சிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி பிராசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய நீதிபதிகள், "தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம்தான் காரணம். தடுப்பு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்தவில்லை.

கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமிநாசினி தெளித்தல், தனி மனித இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதார இயக்குனருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அன்றையதினம் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை புளூ பிரின்டாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2-ம் தேதி எண்ணப்படவுள்ள நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், வேலாயுதம்பாளையம் தனியார் கல்லூரியில், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், அனைவரின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது, தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும், கிருமிநாசினி வைக்க வேண்டும், முக கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது எனக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 4900 சதுர அடி மற்றும் 3400 சதுர அடி என இரண்டு அறைகள் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு சுயேட்சைகளின் ஏஜெண்டுகளை தவிர வேறு யாரையும் அனுப்பப் போவதில்லை என்றும், 9 அரசியல் கட்சிகளில் 7 அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கைகாக ஆறு கூடுதல் மேஜைகள் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com