சொகுசு கார்களில் ஆடு திருடும் கும்பல் : சிசிடிவி கிடைத்தும் திணறும் போலீசார்?
சாயல்குடி பகுதியில் இரவு நேரங்களில் சொகுசு கார்களில் ஆடு திருடும் மர்ம கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு, வெள்ளப்பட்டி, நரிப்பையூர், கன்னி ராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவது தொடர்கதையாகி வருகின்றது.
இந்த நிலையில் சாயல்குடி அருகே வெள்ளப்பட்டி கிராமத்தில் ஜெயபால் மற்றும் லட்சுமி என்பவருக்கு சொந்தமான 9 ஆடுகளை நேற்றிரவு மர்ம நபர்கள் சொகுசு காரில் திருடிச்சென்றுள்ளனர். ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்லும் காட்சிகள் அருகில் உள்ள கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.
அதில் வெள்ளிப்பட்டி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத போது காரை நிறுத்தி விட்டு சாலையோரத்தில் வீடுகளின் முன்பாக கட்டி கிடக்கும் ஆடுகளை ஒவ்வொன்றாக காரில் மர்ம நபர்கள் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளை காவல் நிலையத்தில் கொடுத்தும் போலீசார் திருட்டில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் திணறி வருவதாகவும், பெயரளவிற்கு மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து ஆடு திருட்டில் ஈடுப்படும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.