சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தவெக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்கு சேகரித்த தவெக, இத்தகைய செயலால் தொடக்கத்திலேயே எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
செய்தியாளர்: கவின் பிரசாத்
சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தினேஷ் என்கின்ற ’பாம்பு தினேஷ்’ என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பெற்றோரிடம் கூற கடந்த மூன்றாம் தேதி இதுகுறித்த புகாரினை சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.
இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் 4ஆம் தேதியே தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தினேஷ் ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு என்னும் மையத்திற்குச் சென்றிருந்ததால் கைதுசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தினேஷை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினேஷ் 43ஆவது வார்டு தமிழக வெற்றிக் கழகவட்டச் வட்டச் செயலாளர் என்பதும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன் சேர்ந்து அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கூறி மக்களைச் சந்தித்த தமிழக வெற்றிக்கழக கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் நிர்வாகி இவ்வாறு செய்திருப்பது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

