செல்லப்பிராணி வாங்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையில் செல்லப்பிராணிகள் கடை வைத்திருப்பவர் மணிகண்டன். இவரது கடைக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி செல்லப்பிராணிகள் வாங்குவதற்காகச் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 13-ம் தேதி கடைக்கு வந்த சிறுமியை மணிகண்டன் தனது கடைக்குள் வைத்து கைகளைக் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதே போல 30 ஆம் தேதியும் சிறுமியை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற பிறகு சிறுமி நடந்தவற்றைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் கொலை மிரட்டல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.