பெரம்பலூர்: குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

பெரம்பலூர்: குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் பொதுமக்கள்
பெரம்பலூர்: குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்; நோய்த்தொற்று அச்சத்தில் பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான பகுதியொன்றிலுள்ள பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கழிவு நீர் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. கழிவுநீர் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதித்திருப்பதுடன், நோய்த்தொற்று அபாயமும் எழுந்துள்ளது.

பெரம்பலூர் 7 வார்டில் AEO அலுவலகம் செல்லும் பகுதியில் பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. வெளியேறும் இந்த கழிவுநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இந்த கழிவுநீர் யாவும் சாலையில் வெளியேறி வருவதாகவும், இதுகுறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கழிவுநீர் வெளியேறும் இடத்தில் வாகனங்கள் செல்லும் போது தடுமாறும் நிலை இருப்பதாக இப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து நகராட்சி ஆணையர் குமரிமன்னனிடம் நாம் கேட்டபோது, “உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com