வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:  தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக வேலூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.

வேலூரில் மழையால் பாலாறு, கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சத்துவாச்சாரி, காட்பாடி, அலமேலுமங்காபுரம், வேலப்பாடி, கொணவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் மழையின் போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான விண்ணமங்கலம், வீராங்குப்பம், ஆலங்குப்பம், சான்றோர் குப்பம், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், கடம்பூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இங்கு கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் மழையால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நின்றதால் அதிகாலையில் பொதுமக்கள் பலரும் அவதியுற்றனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மழை பெய்தது. வெப்பம் தணிந்தது மகிழ்ச்சி தான் என்றாலும் கூட, விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வடிகால் வசதி முறையாக இல்லாததால் கழிவு நீருடன் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இருப்பினும் பலத்த மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

புதுக்கோட்டை நகர் பகுதி உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மழையூர், கறம்பகுடி, வடவாளம், இச்சடி, அறந்தாங்கி, எரிச்சி, சிலட்டூர், பரவாக்கோடடை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வீரபாண்டியன் பட்டினம், அடைக்கலாப்புரம், ஆறுமுகநேரி, பரமன்குறிச்சி, உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதே போல் ஆரணி, ராணிப்பேட்டை, நாகை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com