தமிழக அரசியலில், குறிப்பாக ஆளும் அதிமுகவில் பரபரப்பான திருப்பங்களுக்கு வித்திடப்படும் நேரத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க அவர் அவர் நேற்று பெங்களூரு சென்றார். ஆனால், பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டதால் அவரால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை. இன்று அவரை சந்திக்க வசதியாக, பெங்களூருவிலேயே டிடிவி தினகரன் தங்க திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் இரு அணிகளும் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பினார். இதனையடுத்து இரட்டை இலைச் சின்னத்தைப்பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் டெல்லி போலீஸார் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த இன்று சென்னை வரும் நிலையில் அடையாறு இல்லத்தில் வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர். அதன் பிறகு அவர்கள் இருவரும் தினரகனின் இல்லத்திற்கு சென்று இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.