”தவழும் குழந்தைகள்தான் தன்னாட்சி நடத்துவார்கள்..” சேகர்பாபுக்கு செங்கோட்டையன் பதில்!
இன்று மாலை விஜய்யுடன் கலந்து பேச உள்ளேன். அவருடன் பேசிய பிறகுதான் அடுத்து எந்த மாவட்டத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என தவெக மாநில நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”18ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது. விஜயை காண ஏறத்தாழ சுமார் 3 லட்சம் பேர் கூடினர். அக்கூட்டம் வரலாறு படைக்கும் கூட்டமாக அமைந்தது. அமைச்சர் சேகர்பாபு எங்களை தவழும் குழந்தை எனக் கூறுகிறார். தவழும் குழந்தைகள்தான் பெரியவர்கள் ஆவார்கள், பெரியவர்கள் ஆனதற்கு அப்புறமதான் தன்னாட்சி நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ”தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் இல்லாத கட்சி தமிழக வெற்றிக் கழகம்” என்று சொல்கிறார் என்ற கேள்விக்கு, " அதற்கு தேர்தல் முடிவுதான் தீர்ப்பளிக்கும்” என்றார். மேலும் கூட்டணி குறித்து மற்றும், அடுத்த பிரசாரக் கூட்டம் குறித்த கேள்விக்கு, ”இன்று மாலை விஜய்யுடன் கலந்து பேச உள்ளேன். அவருடன் பேசிய பிறகுதான் அடுத்து எந்த மாவட்டத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
மேலும் கூட்டணியை பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் கட்சித் தலைவர்தான் எடுப்பார். வெற்றி பெறுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொங்கலுக்குப் பிறகு என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை நீங்கள் அனைவரும் காணப் போகிறீர்கள். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற வகையில் பேசப்படும்” என கூறினார் செங்கோட்டையன்.

