
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், “செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு. அவர் திமுகவிற்கு சென்றிருந்தால் துரோகம் செய்துவிட்டார் என்று ஒருவரியில் அதிமுகவால் கடந்து சென்றிருக்க முடியும். இனி அதற்கான சூழல் இல்லை. இனிமேல்தான் தேர்தல் களேபரம் தொடங்க இருப்பதால் அதிமுகவில் சீட் கிடைக்காமல் இருப்பவர்களை செங்கோட்டையனை கொண்டு அவர்களை தவெகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடக்கலாம். இனிவரும் காலம் அதிமுகவிற்கு பெரும் சிக்கல்கள் எழக்கூடிய காலமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “தொடர்ச்சியாக விஜய் எம்ஜிஆரின் பெயரையும் அவரது பாடல்களையும் பயன்படுத்துகிறார். அண்ணாவின் பெயரையும் பயன்படுத்துகிறார். இவர்கள் எல்லாம் தவெகவிற்கு செல்லும்பட்சத்தில் எம்ஜிஆர், அண்ணாவின் பெயரை பயன்படுத்துவதற்கு உரிமை இருப்பதுபோல் ஆகிவிடும். ஒருவேளை டிடிவியும், ஓபிஎஸ்ஸும் தவெக அணியில் சேர்ந்துகொண்டார்கள் என்றால் அதிமுகவின் ஒரு பிரிவே தன்னுடன் இருப்பதுபோன்ற தோற்றத்தை விஜயால் ஏற்படுத்த முடியும். ஓபிஎஸ் 15 நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார்.. டிடிவி ஏற்கனவே விஜய் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். இவர்களை அதிமுகவில் இணைக்கமுடியவில்லை என்று தவெக அணியில் செங்கோட்டையன் இணைத்துவிட்டால் அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குதான் சிக்கல். செங்கோட்டையனை தவெக எந்த அளவிற்கு பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்துதான் தவெகவிற்கான பலம் பலவீனம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்,