செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விமல் ராணி (35). இவரது மகன் பிரவீன் (15) ஆகிய இருவரும் வயல்வெளி பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது கிணற்றின் அருகே அமர்ந்திருந்த பிரவீன் குமார் தவறி கிணற்றில் விழுந்துள்ளார், இதைக் கண்ட விமல் ராணி, மகன் பிரவீனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார்.
இந்நிலையில், இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இதையடுத்து வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், துணி துவைக்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாக காணவில்லை என அங்கு சென்று பார்த்தனர். அப்போது புடவை மட்டும் மேலே இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கிணற்றில் நீர் நிரம்பியிருந்ததால் இருவரையும் மீட்க போராடிய மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் போராடி இருவரையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து இருவரது உடலையும் கைப்பற்றிய அணைக்கட்டு போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.