“எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க யார் உறுதுணையாக இருந்தாலும் கூட்டணி வைப்போம்” – செல்லூர் ராஜூ
செய்தியாளர்: மணிகண்டபிரபு
அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், 2026 இல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை கொண்டு வர கடுமையான பாடுபட வேண்டும் என தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசிய போது....
“முதலமைச்சரின் குடும்பத்திற்கான பொற்கால ஆட்சி இது”
“தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. காவல்துறை செயலிழந்து விட்டது என்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி, சாதிக் பாஷா போன்றோர் வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல தமிழக மக்களுக்காக பொற்கால ஆட்சி நடைபெறவில்லை. முதலமைச்சரின் குடும்பத்திற்கான பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது” என்றார்.
“எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது”
தொடர்ந்து அவரிடம் எம்.ஜி.ஆருக்கும் - பிரதமர் மோடிக்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றது என பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை தொடர்பாக எழுப்பிய கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரை போல யாரும் பிறக்கவும் முடியாது. திமுகவில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ஜொலிக்கிறார்கள், கலைஞரை கூட மறந்துவிட்டார்கள். அதனால்தான் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு அவரது பெயரை வைக்கிறார்கள்” என்றார்.
“சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்”
“அதிமுக தலைமையில் கூட்டணி என ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க யார் உறுதுணையாக இருந்தாலும் அவர்களோடு கூட்டணி வைப்போம்” என்றார். இந்த நிபந்தனைகளை சசிகலா, டி.டி.வி தினகரன் ஏற்றுக் கொண்டால் அவர்களை அதிமுகவில் இணைப்பீர்களா என்ற கேள்விக்கு, “சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்” என்றார்.
தொடர்ந்து, பாப்கார்ன் வரி உயர்வு குறித்து பேசுகையில், “குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாது” என்று செல்லூர் ராஜூ கூறினார்.